தர்ஷனுக்கு சிறையில் சலுகை; விரைவில் குற்றபத்திரிகை
தர்ஷனுக்கு சிறையில் சலுகை; விரைவில் குற்றபத்திரிகை
ADDED : நவ 01, 2024 11:21 PM
பெங்களூரு; சித்ரதுர்கா ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த போது, சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, விரைவில் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய, அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
தனக்கு நெருக்கமான பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினார் என்ற காரணத்தால், சித்ரதுர்காவின் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷனும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த போது, தர்ஷன் கையில் சிகரெட்டுடன், ரவுடி வில்சன் கார்டன் நாகா உட்பட சிலரும் சிறை அறை வளாகத்தில் அமர்ந்து, காபி குடித்தபடி அரட்டை அடித்து கொண்டிருந்தனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் பரவின.
இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான சிறை அதிகாரிகள், தர்ஷனை பல்லாரி சிறைக்கு மாற்றினர். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இவருக்கு சிறப்பு சலுகை அளித்தது குறித்து, பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி, விசாரணை நடந்தது.
சிறை அதிகாரிகள், ஊழியர்கள், நடிகர் தர்ஷன் உட்பட, பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறையில் உள்ள ரவுடிகளிடமும் தகவல் பெறப்பட்டது. அனைத்து தகவல்களையும் சேகரித்த போலீசார், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

