பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதில் பிரச்னை; விவாகரத்தில் முடிந்த 11 ஆண்டு திருமண வாழ்க்கை
பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதில் பிரச்னை; விவாகரத்தில் முடிந்த 11 ஆண்டு திருமண வாழ்க்கை
ADDED : டிச 10, 2025 05:38 AM

ஆமதாபாத்: உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த தம்பதி, 2002ல் திருமணம் செய்து கொண்டனர். துவக்கத்தில், கணவன் - மனைவி இடையே உணவு பழக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லை.
தகராறு
சுவாமி நாராயணின் தீவிர பக்தையாக மாறிய மனைவி, மத நம்பிக்கை காரணமாக உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதை தவிர்த்தார். அதே சமயம், கணவரும், அவரது தாயாரும் அவற்றை பயன்படுத்தினர். இது தொடர்பாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நாளடைவில் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, தனித்தனியாக உணவு தயாரிக்கப்பட்டது; எனினும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. அதிருப்தி அடைந்த மனைவி, குழந்தையுடன் தன் அம்மா வீட்டுக்கு சென்றார். மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி ஆமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் 2013ல் மனு தாக்கல் செய்தார்.
ஜீவனாம்சம்
அதில், 'உணவு பழக்க வழக்கங்களில் மனைவி சமரசம் செய்யவில்லை. இது கொடுமைப்படுத்துவதற்கு சமம்' என குறிப்பிட்டிருந்தார். விசாரித்த குடும்பநல நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. மேலும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் கணவருக்கு உத்தரவிட்டது.
விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மனைவி, மத உணர்வை கணவர் புண் படுத்தி விட்டதாகக் கூறி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது, 'பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமைத்த போதும் மனைவி வேண்டுமென்றே பிரச்னை செய்தார்.
'இது தொடர்பாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்து உள்ளேன்' என கணவர் தெரிவித்தார். 'விவாகரத்தை எதிர்க்கவில்லை' என மனைவி தெரிவிக்கவே, அவரது மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை தவணை முறையில் நீதி மன்றத்தில் செலுத்தும்படி கணவருக்கு உத்தரவிட்டது.
பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவது தொடர்பான சிறிய பிரச்னை, 11 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

