UPDATED : பிப் 04, 2025 09:11 PM
ADDED : ஜன 29, 2025 02:56 AM

பீஜிங் :
நம் அண்டை நாடான சீனாவுடன், நீண்ட எல்லையை நாம் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த 2020ல், கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டது.
பலசுற்று பேச்சுக்குப் பின், எல்லையில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற இருதரப்பு இடையே கடந்தாண்டு உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், நம் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இரண்டு நாள் பயணமாக சீனாவுக்கு சென்றிருந்தார். அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யி, இணை அமைச்சர் சன் வீடாங்க் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இந்திய வெளியுறவுச் செயலர் பயணம் தொடர்பாக, சீன வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்டுஉள்ள செய்திக்குறிப்பு:
இந்தியாவுடனான உறவில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு உறவை மேம்படுத்துவதுடன், கருத்து வேறுபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
இதைத் தவிர, இருதரப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான, கூட்டு நிபுணர் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.