சாலை திட்ட செலவில் முறைகேடு: சுங்கம் வசூலிக்க தொடரும் தடை
சாலை திட்ட செலவில் முறைகேடு: சுங்கம் வசூலிக்க தொடரும் தடை
ADDED : டிச 22, 2024 03:54 AM

புதுடில்லி: டில்லி - -நொய்டா -விரைவு சாலையில் பயணியரிடம் சுங்க கட்டணம் வசூலிக்க, அலகாபாத் உயர் நீதிமன்றம் 2016ல் விதித்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததுடன், இந்த சுங்கச்சாவடியை அதிகார துஷ்பிரயோகம் என கூறியது.
டில்லியில் இருந்து நொய்டா செல்ல டி.என்.டி., எனப்படும் டில்லி - நொய்டா நேரடி விரைவு சாலை உள்ளது. 9.2 கி.மீ., துாரமுள்ள இந்த சாலையை, என்.டி.பி.சி.எல்., எனப்படும் நொய்டா டோல் பிரிட்ஜ் என்ற தனியார் நிறுவனம் அமைத்து, 2001ல் திறந்தது.
இந்த சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் 2031 வரை சுங்க கட்டணம் வசூலிக்க, என்.டி.பி.சி.எல்., நிறுவனத்துக்கு நொய்டா ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது.
மேல்முறையீடு
அதிக அளவு சுங்க கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நொய்டா குடியிருப்பாளர்கள் நலச்சங்கம் 2016ல் நாடியது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, என்.டி.பி.சி.எல்., நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சுங்க கட்டணம் இல்லாததால், நிறுவனத்தின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியது.
தேவையற்ற சுமை
அதில் என்.டி.பி.சி.எல்., நிறுவனம் குறித்த சி.ஏ.ஜி.,யின் அறிக்கையை மேற்கோள்காட்டி கூறியிருப்பதாவது:
சாலை அமைத்த தனியார் நிறுவனம், வழக்கு செலவு, ஊழியர்களுக்கு வழங்கிய கார்ப்பரேட் பரிசு பொருட்களான தங்க நாணயம், இயக்குனரின் தனிப்பட்ட செலவு என மொத்தம் 45.72 கோடி ரூபாயை, திட்ட மதிப்பில் சேர்த்துள்ளனர்.
சுங்க கட்டணம் வசூலிக்க, 20 சதவீத நிரந்தர வருமானம் என்ற பார்முலா பயன்படுத்தப்பட்டிருப்பது எதார்த்ததிற்கு பொருந்தாத நியாயமற்ற ஒன்று.
இதனால் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து, தேவையற்ற சுமையை ஏற்றிஉள்ளனர்.
எனவே சுங்க கட்டணம் வசூலிக்க தடைவிதித்த அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.