காட்டு யானைகள் கூட்டத்தால் 11 கிராமங்களில் தடை உத்தரவு
காட்டு யானைகள் கூட்டத்தால் 11 கிராமங்களில் தடை உத்தரவு
ADDED : நவ 11, 2024 04:15 AM

சிக்கமகளூரு : காட்டு யானைகள் கூட்டம் புகுந்துள்ளதால், மக்களின் பாதுகாப்பை கருதி சிக்கமகளூரின் 11 கிராமங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் காட்டு யானைகள் தொந்தரவால், மக்கள் அவதிப்படுகின்றனர். எப்போது, எங்கிருந்து யானை வந்து தாக்குமோ என்ற பீதியுடன் நடமாடும் சூழ்நிலை உள்ளது.
சிக்கமகளூரின் துடகூரு கிராமத்தில் இம்மாதம் 9ம் தேதி, ஒரு காட்டு யானை உணவு தேடி வந்தது. அப்போது காபி தோட்டத்தில் மின் வேலியை மிதித்ததில், உயிரிழந்தது.
இந்த யானையை சுற்றிலும், 23 காட்டு யானைகள் சூழ்ந்துள்ளன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை விரட்ட முயற்சித்தனர். ஆனால், அவைகள் நகரவில்லை.
முன்னெச்சரிக்கையாக துடகூரு, ஆல்துார்புரா, ஹொசஹள்ளி, தோரணமாவு, சித்துவள்ளி உட்பட சுற்றுப்புறத்தில் உள்ள 11 கிராமங்களில், வனத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
'யானைகள் காட்டுக்குள் செல்லும் வரை, யாரும் தோட்டங்களுக்கு செல்ல கூடாது. சிறு குழந்தைகளை வெளியே விட வேண்டாம். முடிந்த வரை வீட்டுக்குள் இருக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது.
தடை உத்தரவு உள்ளதால், கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.