மடாதிபதி காரை முற்றுகையிட்டு போராட்டம் கார் மீது பெண் செருப்பை வீசியதால் பரபரப்பு
மடாதிபதி காரை முற்றுகையிட்டு போராட்டம் கார் மீது பெண் செருப்பை வீசியதால் பரபரப்பு
ADDED : பிப் 17, 2024 11:23 PM

பாகல்கோட், : பாகல்கோட் குருலிங்கேஸ்வரா மடத்திற்கு, மடாதிபதி நியமிக்கப்பட்ட விவகாரத்தில், ரம்பாபுரி மடத்தின் மடாதிபதி வீரசோமேஸ்வர சிவாச்சாரியார் சுவாமிகள் காரை முற்றுகையிட்டு, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கார் மீது, ஒரு பெண் செருப்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகல்கோட் மாவட்டம் கலடகி கிராமத்தில், குருலிங்கேஸ்வரா மடம் உள்ளது. இந்த மடம் ரம்பாபுரி மடத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த மடத்தின் மடாதிபதியாக சந்திரசேகர சுவாமிகள் இருந்தார். கடந்த 2016 ல் கங்காதர சுவாமி, மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு மடத்தின் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரம்பாபுரி மடத்தின் மடாதிபதியாக உள்ள வீரசோமேஸ்வர சிவாச்சாரியார் சுவாமிகளும், கங்காதர சுவாமிகளும் உறவினர்கள் ஆவர். உறவினரை மடாதிபதியாக நியமித்து, மடத்தின் சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்வதாக, வீரசோமேஸ்வர சிவாச்சாரியார் சுவாமிகள் மீது, பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
கங்காதர சுவாமிகள் நியமனத்தை எதிர்த்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் மடத்தில் மராமத்து வேலைகளை செய்ய, மடாதிபதி கங்காதர சுவாமி முடிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தினர். மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்கவே, மராமத்து வேலைகள் செய்வதாக குற்றஞ்சாட்டினர். மடத்தில் இருந்த பொருட்கள், மாயமாகி இருப்பதாகவும் கூறி வந்தனர்.
இந்நிலையில் கலடகி அருகே உதகட்டி கிராமத்தில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, ரம்பாபுரி மடாதிபதி வீரசோமேஸ்வர சிவாச்சாரியார் காரில் சென்றார்.
அவர், காரை முற்றுகையிட்டு, பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது காரை நோக்கி, ஒரு பெண் செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
இதுகுறித்து மடாதிபதி வீரசோமேஸ்வர சிவாச்சாரியார் சுவாமிகள் கூறுகையில், ''கலடகி கிராம மக்களை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். அனைத்து ஊர்களிலும் பிரச்னை செய்ய ஒரு கும்பல் உள்ளது.
''மடத்தின் வளர்ச்சிக்காக, மராமத்து வேலைகளை செய்தால் தவறா. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நாங்கள் நடந்து கொள்வோம்,'' என்றார்.