ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம்
ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம்
UPDATED : டிச 05, 2024 04:18 PM
ADDED : டிச 05, 2024 08:12 AM

சென்னை: ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், 'புரோபா - 3' செயற்கைக் கோள்கள், 'இஸ்ரோ'வின் பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் வாயிலாக, நேற்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோள் மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோளையும் விண்ணில் நிறுத்தி வருகிறது. அதன்படி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய, 'புரோபா - 3' பெயரில் இரு சிறிய செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ளது. அவற்றின் எடை, 550 கிலோ.
இந்த செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் நேற்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. இதற்கான, 25 மணி நேர, 'கவுன்ட் டவுன்' நேற்று முன்தினம் மாலை, 3:08 மணிக்கு துவங்கியது. நேற்று ராக்கெட் ஏவும் பணி, இறுதி கட்டத்தை எட்டியது.
திடீரென மாலை, 3:10 மணிக்கு, ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இன்று மாலை, 4:12 மணிக்கு ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது. சில மணி நேரங்களுக்கு பின், 'புரோபா 3' செயற்கைக் கோள்களை சுமந்து, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட், இன்று மாலை, 4:04 மணிக்கு ஏவப்படும் என, இஸ்ரோ தெரிவித்தது.
இது குறித்து, இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:
பி.எஸ்.எல்.வி., - சி 59 ராக்கெட்டில் எவ்வித பிரச்னையும் இல்லை. அதை ஏவுவதற்கான கவுண்டவுன் துவங்கியது முதல், ராக்கெட்டின் அனைத்து பகுதிகளும் சரியான இயக்கத்தில் இருந்தன.
திடீரென, மாலை இஸ்ரோ விஞ்ஞானிகளை தொடர்பு கொண்டு, செற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்ததாகவும், அதற்காக ராக்கெட் ஏவுதலை ஒத்தி வைக்கும்படி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கேட்டுக் கொண்டது. அதற்கு ஏற்ப, ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.