ஜாதிவாரி அறிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
ஜாதிவாரி அறிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
ADDED : மார் 06, 2024 05:25 AM
பெங்களூரு, : ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பான பொதுநல மனு மீதான விசாரணையை, வரும் 21ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கர்நாடக பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் ஆய்வறிக்கை, பிப்ரவரி 29ல் முதல்வர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் லிங்காயத், ஒக்கலிகர் சமுதாயங்களின் மக்கள் தொகை குறைவாகவும், பிற்படுத்தப்பட்டோர் மக்கள் அதிகமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் லிங்காயத், ஒக்கலிகர், பிராமணர் ஆகிய சமுதாயங்கள் கொதித்தெழுந்துள்ளன.
அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென, அந்த சமுதாய தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையென்றால் போராட்டம் நடத்துவதாக எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண், “ஆணையம் ஏற்கனவே மாநில அரசிடம், அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில், அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

