ஹிஜாபை நீக்கச்சொன்ன பேராசிரியரை தண்டிப்பதா?: மம்தா அரசுக்கு பா.ஜ., கண்டனம்
ஹிஜாபை நீக்கச்சொன்ன பேராசிரியரை தண்டிப்பதா?: மம்தா அரசுக்கு பா.ஜ., கண்டனம்
UPDATED : ஜன 09, 2026 06:12 AM
ADDED : ஜன 09, 2026 12:14 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், தேர்வு அறையில் மாணவியரின் ஹிஜாபை அகற்ற வலியுறுத்திய பல்கலை பேராசிரியை விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்கட்டாவை அடுத்த ஜாதவ்பூரில் மாநில அரசின் பல்கலை செயல்பட்டு வருகிறது.
வலியுறுத்தல்
இந்த பல்கலையில், கடந்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன. கடந்த 22ம் தேதி நடந்த தேர்வை எழுத வந்த இரு முஸ்லிம் மாணவியர், 'ஹிஜாப்' எனப்படும் முகத்தை மூடும் துணியை அணிந்திருந்தனர்.
தேர்வு எழுத வந்தது, உண்மையாகவே மாணவியர்தானா என்பதை சரிபார்க்க, ஹிஜாபை அகற்றும்படி பல்கலையின் ஆங்கில துறை பேராசிரியை சஸ்வதி ஹால்டர் வலியுறுத்தினார். இதற்கு, அங்கு பயிலும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மத உணர்வை புண்படுத்திய பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, பல்கலையால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரையின்படி, சஸ்வதி நீண்ட நாட்களுக்கு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில், பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியதாவது: தேர்வு எழுதும் மாணவியரை அடையாளம் காண, ஹிஜாபை அகற்றச் சொல்வது கல்வி நிறுவனங்களில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை. நிறுவன விதிகள், கல்வி ஒருமைப்பாடு, தேர்வு செயல்முறையின் பாதுகாப்பை பேணுவதற்கு பதிலாக, முஸ்லிம்களை திருப்திபடுத்தும் நடவடிக்கையில் மம்தாவின் மேற்கு வங்க அரசு ஈடுபட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இந்த விவகாரத்தில் ஓட்டு வங்கி அரசியலை மாநில அரசு கையிலெடுத்துள்ளது. கல்வி, நியாயம் உள்ளிட்டவற்றை பின்தள்ளி, குறிப்பிட்ட சமூகத்தை திருப்திபடுத்தும் முயற்சியில் மம்தா அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பேராசிரியைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. , குற்றஞ்சாட்டியுள்ள சூழலில், அவர் தன் விருப்பப்படி விடுமுறையில் சென்றுள்ளதாக ஜாதவ்பூர் பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

