மாணவனுடன் 'டும்... டும்...' பேராசிரியையிடம் விசாரணை
மாணவனுடன் 'டும்... டும்...' பேராசிரியையிடம் விசாரணை
ADDED : ஜன 30, 2025 01:19 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், பல்கலை வகுப்பறையில் மாணவனை பேராசிரியை திருமணம் செய்து கொள்ளும், 'வீடியோ' வெளியான நிலையில், அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், பல்கலை வகுப்பறையில் மாணவனை, மூத்த பேராசிரியை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. இருவரும் மணமக்கள் அலங்காரத்தில் இருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு மணமகன் திலகம் இடுவது, மாலை மாற்றிக்கொள்வது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றன.
இது தொடர்பான விமர்சனங்களும், கண்டன குரல்களும் எழுந்தன. இந்த சம்பவம், நாடியா மாவட்டம் ஹாரிங்கடா பகுதியில் இயங்கி வரும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலையில் உள்ள உளவியல் துறையில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது. வெவ்வெறு துறைகளைச் சார்ந்த மூன்று பேராசிரியைகள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. அதில், உளவியல் பாடம் தொடர்பான விவாதத்துக்காக திருமணம் செய்வது போல் நாடகம் நடத்தப்பட்டதும், பாடம் நடத்துவதை ஆவணப்படுத்துவதற்காக வீடியோவாக எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி கூறுகையில், 'மாணவர்களின் பாடத்தின் ஒரு பகுதியாக திருமணம் நடப்பது போல் நாடகம் நடத்தப்பட்டது என சம்பந்தப்பட்ட பேராசிரியை விளக்கமளித்துள்ளார். இருப்பினும், விசாரணை முடியும் வரை மாணவனையும், அந்த பேராசிரியையும் விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மைத்தன்மை குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது' என்றார்.