நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமரா ; தகவல் சொன்ன ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமரா ; தகவல் சொன்ன ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
ADDED : செப் 02, 2024 11:35 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் கேரவன்களில் ரகசிய கேமரா வைத்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில், அவரிடம் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளனர்.
கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பெரும்பாலானவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை பெண் கலைஞர்கள் சுமத்தி உள்ளனர். இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு, 'கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர் என்று நடிகை ராதிகா கூறியிருந்தார்.
நானே பார்த்தேன்!
பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன்' என பிரபல நடிகை ராதிகா சரத்குமார் கூறிய தகவல் இணையதளத்தில் வைரலானது.
விசாரணை
இந்நிலையில், இன்று (செப்.,01) கேரளா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடிகை ராதிகாவிடம் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தினர். அப்போது, எப்போது எந்த நடிகைக்கு நடந்தது என சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் ராதிகாவிடம் கேட்டறிந்தனர்.