காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தை இன்று துவங்குகிறார் ராகுல்
காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தை இன்று துவங்குகிறார் ராகுல்
ADDED : செப் 04, 2024 06:27 AM

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில், வரும் 18ல் முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரசின் தேர்தல் பிரசாரத்தை, அக்கட்சி மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், இன்று துவங்குகிறார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள, 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்து, காங்., போட்டியிடுகிறது.
இதன்படி, 90 தொகுதிகளில், தேசிய மாநாட்டு கட்சி, 51 இடங்களிலும், காங்., 32 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஐந்து இடங்களில் இந்த இரு கட்சிகளும் நட்பு ரீதியாக எதிர்த்து போட்டியிடும் நிலையில், இரு தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான காங்., பிரசாரத்தை, அக்கட்சி மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், இன்று துவங்குகிறார்.
இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் காங்., தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா நேற்று கூறியதாவது:
டில்லியில் இருந்து ஜம்முவுக்கு, இன்று காலை விமானத்தில் ராகுல் வருகிறார். ராம்பான் மாவட்டத்தின் கூல் பகுதியில், மதியம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இதை முடித்து, அனந்த்நாக் மாவட்டத்துக்கு செல்லும் ராகுல், துாரு பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது பிரசாரம் காங்கிரசுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.