வயநாட்டுக்கு சுற்றுலா வாங்க; பாதுகாப்பானது என்கிறார் ராகுல்!
வயநாட்டுக்கு சுற்றுலா வாங்க; பாதுகாப்பானது என்கிறார் ராகுல்!
UPDATED : செப் 23, 2024 11:34 AM
ADDED : செப் 23, 2024 10:33 AM

புதுடில்லி: 'வயநாடு பாதுகாப்பானது; சுற்றுலாப்பயணிகள் வர வேண்டும்' என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் கடந்த ஜூலை 30ம் தேதியன்று முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். கிராமங்கள் நிலச்சரிவில் புதைந்து போயின. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இதனால் அங்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. வெளியூர் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:வயநாட்டின் அழகு மறுக்க முடியாதது, அதன் மக்களின் இரக்கமும், கருணையும்தான் என்னை எப்போதும் ஈர்க்கிறது. இன்று, தங்கள் வாழ்வாதாரத்திற்காக சுற்றுலாவை நம்பியிருக்கும் பலர், உங்கள் அனைவரின் உதவியையும் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்திய சோகம் முண்டக்கை உட்பட வயநாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற தவறான கருத்துக்கு வழிவகுத்தது.
இதனால், சுற்றுலாவில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வயநாடு இன்னும் துடிப்பாகவும் வரவேற்புடனும் உள்ளது. வயநாடு மிகவும் பாதுகாப்பானது. சுற்றுலாவுக்கு வருகை தரும் பயணிகள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.