ஜம்மு - காஷ்மீரில் பிரசாரத்தை துவக்கிய ராகுல்: பா.ஜ.,வை வெளியேற்றுவோம் என சூளுரை
ஜம்மு - காஷ்மீரில் பிரசாரத்தை துவக்கிய ராகுல்: பா.ஜ.,வை வெளியேற்றுவோம் என சூளுரை
ADDED : செப் 05, 2024 12:45 AM

ஜம்மு: ''பிரதமர் நரேந்திர மோடியை மனதளவில் உடைத்து விட்டோம். அதை நான் பார்லிமென்டில் நேரில் பார்த்தேன். அவரது தலைமையிலான அரசை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை,'' என, ஜம்முவில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய ராகுல் ஆவேசமாக பேசினார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
'இண்டி' கூட்டணியின் அங்கமாக, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்து, காங்., போட்டியிடுகிறது.
இதன்படி, 90 தொகுதிகளில், தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்., 32 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஐந்து இடங்களில் இந்த இரு கட்சிகளும் நட்பு ரீதியாக எதிர்த்து போட்டியிடும் நிலையில், இரு தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் ராம்பான் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பிரசாரத்தை துவக்கினார்.
தடுத்து நிறுத்துவோம்
அப்போது அவர் பேசியதாவது:
சட்டசபை தேர்தலுக்கு முன், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், இதை பா.ஜ., விரும்பவில்லை.
அக்கட்சி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப பெற்று தருவோம். இதை இண்டி கூட்டணி உறுதி செய்யும்.
ஜம்மு - காஷ்மீரில், துணைநிலை கவர்னர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் உள்ளார். மக்களின் நலன் பற்றி கவலைப்படாத அந்த மன்னர், ஜம்மு - காஷ்மீரின் வளங்களை வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு வாரி வழங்குகிறார். இதையெல்லாம் நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.
'நாம் இருவர்; நமக்கு இருவர்' என்ற கொள்கையின் கீழ், பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
மோடி, அமித் ஷா, அதானி, அம்பானி தான் அந்த நால்வர். இந்த இரு கோடீஸ்வரர்களுக்கு நன்மை செய்வதற்காகவே, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை, மோடி அரசு பறித்தது.
ஜம்மு - காஷ்மீரின் நிலைமை, நாட்டின் மற்ற பகுதிகளை விட மோசமாக உள்ளது. அங்கு வேலைவாய்ப்பு இல்லாமல், அதிகளவில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியை நாம் மனதளவில் உடைத்து விட்டோம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால், அவர் மிகவும் உடைந்து போயுள்ளார். அதை நான் பார்லி.,யில் நேரில் பார்த்தேன்.
முன்பெல்லாம் பார்லி.,க்கு வரும் போது, பிரதமர் மோடி நெஞ்சை நிமிர்த்தி நடந்து வருவார். ஆனால் தற்போது, அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் பதுங்கி பதுங்கி அவர் வருகிறார்.
தக்க பதிலடி தரணும்
மோடியின் பயம் அவரது கண்ணில் தெரிகிறது. இதுவே நமக்கு வெற்றி தான். இன்னும் கொஞ்ச காலம் தான் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து மோடி அரசை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஜம்மு - காஷ்மீரில், காங்., - தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி அரசு அமையும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தேர்தலில், பா.ஜ.,வுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காலத்தின் கட்டாயம்!
ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்காகவும், அதன் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கவும், காங்., உடனான கூட்டணி என்பது கட்டாயம் அல்ல. அது, காலத்தின் தேவை. தேர்தலில் எங்கள் கூட்டணி வெல்வது உறுதி.
பரூக் அப்துல்லா
தலைவர், தேசிய மாநாட்டு கட்சி