வயநாட்டில் சுற்றுலாவிற்கு ஊக்கம்: ஜிப்லைனில் பயணித்த ராகுல்
வயநாட்டில் சுற்றுலாவிற்கு ஊக்கம்: ஜிப்லைனில் பயணித்த ராகுல்
UPDATED : நவ 13, 2024 08:03 PM
ADDED : நவ 13, 2024 07:44 PM

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அங்கு அமைக்கப்பட்டு இருந்த நீண்ட ஜிப்லைனில் பயணம் செய்தார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார்.
ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு லோக்சபா தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அங்கு அவரது சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார். நேற்று முன்தினத்துடன் பிரசாரம் முடிவு பெற்றது. இதனையடுத்து ஓய்வில் இருக்கும் ராகுலும், பிரியங்காவும் வயநாடு தொகுதியில் உள்ள காரபழா அணைக்கு சென்றனர்.
அங்கிருந்த நீளமான ஜிப்லைனில் ராகுல் பயணித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சீர்குலைந்த வயநாட்டின் சுற்றுலாவை மீட்டெடுக்க இந்த பயணத்தை மேற்கொண்டதாக ராகுல் கூறியுள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் ராகுல் கூறியதாவது; வயநாட்டில் பிரசாரம் முடிவடைந்த நிலையில், உள்ளூர் மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல்வேறு சவால்களை சந்தித்தும் அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. அவர்கள் ராட்சத ஊஞ்சல், டிராப் டவர் மற்றும் ஜிப்லைன் ஆகியவற்றை அமைத்து வயநாடு பாதுகாப்பானது என்பதை பார்வையாளர்களுக்கு காட்டி அசத்துகின்றனர். நானும் ஜிப்லைனில் பயணித்து ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தேன் எனக்கூறியுள்ளார்.
மேலும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடிய ராகுல், வயநாட்டில் எந்த பிரச்னையும் இல்லை. நிலச்சரிவு என்பது உள்ளூர் நிகழ்வு. இதனால் சுற்றுலா பாதிப்பு அடையாது எனக்கூறினார்.
மேலும், பிரியங்காவை ஜிப்லைனில் பயணிக்குமாறு கூறிய ராகுல், வயநாட்டை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த வீடியோவில் ராகுலை புகழ்ந்து கருத்து பதிவிட்டு வரும் இணையதளவாசிகள் அதனை வைரலாக்கி உள்ளனர்.