அரசியலமைப்பு குறித்து ராகுல் பேச்சு: தேர்தல் கமிஷனில் புகார்
அரசியலமைப்பு குறித்து ராகுல் பேச்சு: தேர்தல் கமிஷனில் புகார்
ADDED : மே 09, 2024 03:51 PM

புதுடில்லி: பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் பேசியதற்கு எதிராக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் அத்வாலே தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் மீண்டும் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என ராகுல் தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களில் பேசி வருகிறார். அதேநேரத்தில் பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றாது என மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில், பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் பேசியதற்கு எதிராக மத்திய அமைச்சர் அத்வாலே தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்கள் சந்திப்பில், ‛‛மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக ராகுல் அடிக்கடி கூறி வருகிறார்.
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி இந்த குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளார். ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.