குழந்தையுடன் பணியாற்றும் ரயில்வே பெண் போலீஸ்: குவிகிறது பாராட்டு
குழந்தையுடன் பணியாற்றும் ரயில்வே பெண் போலீஸ்: குவிகிறது பாராட்டு
UPDATED : பிப் 18, 2025 02:16 PM
ADDED : பிப் 18, 2025 02:06 PM

புதுடில்லி: டில்லி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு பணியாற்றும் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
டில்லியில் ரயில்வே பாதுகாப்புப் படையில் போலீசாக பணிபுரிபவர் ரீனா. இவரது கணவர் சி.ஆர்.பி.எப்., போலீசாக காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக ஓராண்டுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனால், ரீனா விடுமுறையில் இருந்து உள்ளார்.
கடந்த 15ம் தேதி டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பாதுகாப்பு கருதி விடுமுறையில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு வர ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ரீனாவுக்கு உறவினர்கள் என யாரும் இல்லாத காரணத்தினால், தனது இரண்டு குழந்தைகளையும் காப்பகத்தில் விட்டுள்ளார். 3வது குழந்தைக்கு ஒரு வயது மட்டுமே ஆனதால், யாரிடமும் விட முடியவில்லை. இதனையடுத்து குழந்தையை தனது உடலுடன் சேர்த்துக் கட்டியபடி பணிக்கு வந்தார். ஒரு கையில் குழந்தையை அணைத்தபடி, மறு கையில் லத்தியுடன் நடைபாதையில் அங்கும் இங்கும் நடந்தபடி கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இதனை பார்த்த சிலர், அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் அது வைரலாக துவங்கியது. ஆர்பிஎப் போலீசாரும், இதனை வீடியேவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக ரீனா கூறுகையில், '' இது எனக்கு வழக்கமானதாகிவிட்டது. குழந்தை பாதிக்கப்படக்கூடாது. குழந்தையை கவனமுடன் பார்த்துக் கொள்ள ஒருவர் கிடைக்கும் வரை, இப்படியே பணி செய்ய வேண்டி உள்ளது,'' என்றார்.

