10 சீட்டு போச்சு... ஏக்நாத் ஷிண்டேவை அப்செட்டாக்கிய ராஜ் தாக்கரே கட்சி
10 சீட்டு போச்சு... ஏக்நாத் ஷிண்டேவை அப்செட்டாக்கிய ராஜ் தாக்கரே கட்சி
ADDED : நவ 25, 2024 11:35 AM

மும்பை: மஹா., சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சியால், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு 10 தொகுதிகள் கையை விட்டு போனது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதேபோல, 49 தொகுதிகளை வென்ற இண்டியா கூட்டணியில், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.
இந்தத் தேர்தலில் ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சி (எம்.என்.எஸ்.,) தனித்துப் போட்டியிட்டதால் தான், ஓட்டு பிரிந்து அவரது உறவினரான உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு 20 தொகுதிகள் கிடைத்துள்ளது. இல்லையெனில், 10 தொகுதிகள் வரை ஏக்நாத் ஷிண்டே தரப்பு வெற்றி பெற்றிருக்கும்.
உத்தவ் தாக்கரே கட்சி வெற்றி பெற்ற வானி, விஹாரோலி, ஜோகேஸ்வரி கிழக்கு, திண்டோஷி, வெர்ஷோவா, காலினா, பந்த்ரா கிழக்கு, மஹிம், வொர்லி மற்றும் குஹாகர் ஆகிய தொகுதிகளில் ராஜ் தாக்கரே கட்சியினர் ஓட்டை பிரித்து விட்டனர்.
வெற்றி வித்தியாசத்தை காட்டிலும் அதிகப்படியான ஓட்டுக்களை மஹாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சி பெற்றுள்ளது.
இது குறித்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூறுகையில், 'எம்.என்.எஸ்., கட்சியுடன் கூட்டணி அமைக்க பல பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவர்களின் பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டோம். ஆனால், ஏற்றுக் கொள்ள முடியாத சில கோரிக்கைகளால் கூட்டணி அமையவில்லை. இது உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது, அவர்களின் பி டீமாக மாறிவிட்டார்கள்,' எனக் கூறினார்.
இது பற்றி அரசியல் வல்லுநர்கள் கூறியதாவது: எம்.என்.எஸ்., கட்சியின் வேட்பாளர்கள், ஏக்நாத் ஷிண்டேவின் இந்துத்துவா மராத்தி ஓட்டுக்களை பிரித்து விட்டது உண்மைதான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ராஜ் தாக்கரேவுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. ஆனாலும், ராஜ் தாக்கரே நிறுத்திய வேட்பாளர்களால் தான், உத்தவ் சிவசேனா வேட்பாளர்கள் ஒரு சில இடங்களில் ஆவது வெற்றி பெற முடிந்தது என்கின்றனர் அரசியல் கட்சியினர்.