மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் எல். முருகன்: குஜராத்தில் இருந்து நட்டா போட்டி
மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் எல். முருகன்: குஜராத்தில் இருந்து நட்டா போட்டி
UPDATED : பிப் 14, 2024 04:21 PM
ADDED : பிப் 14, 2024 10:49 AM

புதுடில்லி : ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பா.ஜ., அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்தும், எல்.முருகன் ம.பி.,யில் இருந்தும் போட்டியிட உள்ளனர். குஜராத்தில் இருந்து பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 56 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்காக வரும் பிப்.,27 ல் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட இந்த பட்டியலில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்தும், எல். முருகன் ம.பி.,யில் இருந்தும் போட்டியிட உள்ளனர். மேலும் ம.பி.,யில் இருந்து உமேஷ் நாத் மஹாராஜ், மாயா நரோலியா, பென்சிலால் குர்ஜார் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலில், நீலகிரியில் இருந்து முருகன் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியான நிலையில், அவர் மீண்டும் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்.
அதேபோல், குஜராத்தில் இருந்து பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மஹாராஷ்டிராவில் இருந்து அசோக் சவான், மேதா குல்கர்னி ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசோக் சவான் இரு நாட்களுக்கு முன்பு தான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தார்.

