'ராமர் பற்றிய எண்ணங்களை பகிருங்கள்': பக்தர்களுக்கு கோயில் அறக்கட்டளை அழைப்பு
'ராமர் பற்றிய எண்ணங்களை பகிருங்கள்': பக்தர்களுக்கு கோயில் அறக்கட்டளை அழைப்பு
ADDED : ஜன 16, 2024 03:06 PM

அயோத்தி: ராமர் கோயில் மற்றும் கும்பாபிஷேகம் பற்றிய எண்ணங்களை ஒரு சிறிய வீடியோ மூலம் வெளிப்படுத்துமாறு உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இதற்காக உலகம் முழுவதும் உள்ள ஹிந்து மதத்தினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, பக்தர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வீடியோ வெளியிட கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராமர் தனது உரிமையான வசிப்பிடத்திற்குத் திரும்புவது பிரபஞ்சத்தை இணையற்ற உணர்ச்சிகளால் நிரப்புகிறது. அவரது வரவேற்பின் மகத்துவத்தை அதிகரிக்க, உலகெங்கிலும் உள்ள அனைத்து ராமபக்தர்களும் இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றிய தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு சிறிய வீடியோ மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் #ShriRamHomecoming என்ற ஹேஸ்டேக் உடன் தங்களது முழுப்பெயர், இருப்பிடம் மற்றும் தங்களை பற்றிய தனிப்பட்ட குறிப்பை சுருக்கமாக குறிப்பிட்டு பதிவேற்றலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.