ADDED : மார் 06, 2024 08:58 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் கடந்த ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடர், ஹிமாச்சலப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
டில்லியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த ஆண்டு ஜோதிடர் சித்தாந்த ஜோஷி, 35, என்பவரிடம் ஆலோசனை பெறச்சென்றார்.
அப்போது, அவரிடம் நெருக்கமாகப் பேசிய ஜோஷி, தானே திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். மிகவும் நெருக்கமாக பழகிய அடுத்த சில நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில், தன் தனிப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி ஜோஷி தன்னை மிரட்டுவதாக, டில்லி போலீசில் அந்தப் பெண் கடந்த 1ம் தேதி புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதிடர் ஜோஷியைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர்.
அவருடைய மொபைல் போன் எண்ணை கண்காணித்து, உத்தர பிரதேசம், உத்தர காண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அவரைத் துரத்தினர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் கசவுலி நகரில் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததையும், அவரை மிரட்டியதையும் ஜோஷி ஒப்புக் கொண்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோஷி, சிறையில் அடைக்கப்பட்டார்.

