வினய் குல்கர்னி மீதான பலாத்கார வழக்கு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு
வினய் குல்கர்னி மீதான பலாத்கார வழக்கு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 12, 2024 07:12 AM

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி மீதான பலாத்கார வழக்கு விசாரணையை சி.ஐ.டி.,யிடம், அரசு ஒப்படைத்து உள்ளது.
தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி, 55. இவர் மீது பெங்களூரு சஞ்சய்நகர் போலீசில், கடந்த 8ம் தேதி பெலகாவியை சேர்ந்த 34 வயதான பெண் விவசாய தலைவர் பாலியல் புகார் அளித்தார்.
தன்னிடம் ஆபாசமாக பேசியதுடன், பாலியல் தொல்லை கொடுத்ததுடன், காரில் வைத்து வினய் குல்கர்னி பலாத்காரம் செய்தார் என்று கூறி இருந்தார்.
அந்த புகாரின்படி, வினய் குல்கர்னி மீது பலாத்காரம் உட்பட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவானது.
இந்நிலையில் தன் மீது புகார் அளித்த பெண்ணும், தனியார் செய்தி சேனலின் உரிமையாளரும் தன்னிடம், 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால், பாலியல் புகார் செய்ததாகவும் வினய் குல்கர்னி கூறினார். புகார் அளித்த பெண், தனியார் செய்தி உரிமையாளர் மீது, சஞ்சய்நகர் போலீசில் புகார் செய்தார். அவர் மீதும் வழக்கு பதிவானது.
'பாலியல் வழக்கு பதிவான பின்னரும், வினய் குல்கர்னியை கைது செய்யாதது ஏன்?
முனிரத்னாவுக்கு ஒரு நியாயம்; வினய் குல்கர்னிக்கு ஒரு நியாயமா' என்று, பா.ஜ., தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் வினய் குல்கர்னி மீது பதிவான பலாத்கார வழக்கு, அவர் அளித்த எதிர் புகார் குறித்து விசாரிக்க, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு நேற்று உத்தரவிட்டது.

