கேட்கவே மனசு வலிக்கும்; அமெரிக்கா சென்றடைய இந்தியர்கள் படும்பாடு!
கேட்கவே மனசு வலிக்கும்; அமெரிக்கா சென்றடைய இந்தியர்கள் படும்பாடு!
ADDED : செப் 04, 2024 09:52 AM

வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவை அடைவதற்கு இந்தியர்கள் அடர்ந்த காட்டு பகுதிகளில் பயணம் செய்கின்றனர். பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர். 12% பேர் இறந்து விடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் செல்வச்செழிப்பும், எண்ணற்ற வேலை, தொழில் வாய்ப்புகளும் உலகெங்கும் உள்ள மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இதனால் அந்நாட்டுக்கு குடி பெயர்வதில் இந்தியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சட்டப்படி விசா பெற்று செல்வதில் இருக்கும் சிரமங்கள் காரணமாக பலரும் சட்ட விரோதமாக செல்கின்றனர். அந்நாட்டுக்குள் நுழைவதற்கு கரடு முரடான, அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணம் செய்கின்றனர்.
இப்படி இந்தியர்கள் படும் துயரங்கள் குறித்து ஆங்கில செய்தி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து அடர்ந்த காட்டுப்பகுதியில் பயணம் செய்யும் போது 12 சதவீதம் பேர் இறந்து விடுகின்றனர்.
பாலியல் வன்கொடுமை!
மாபியாக்களால் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். சட்ட விரோதமாக குடியேறுபவர்களை அமெரிக்காவிற்குள் அழைத்து செல்ல மனித கடத்தல்காரர்கள் ரூ.40 லட்சம் முதல் 80 லட்சம் வரை வசூல் செய்கின்றனர். இந்த பயண காலம் இரண்டு ஆண்டு வரை ஆகலாம். பனாமா, கோஸ்டாரிகா, சால்வடார் மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளில் உள்ள மாபியா கும்பல்களை நம்பி, இந்தியர்கள் அதிக துயரங்களை எதிர்கொள்கின்றனர்.
போலி விசா!
அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக நுழைய இந்தியர்கள் படும் கஷ்டங்கள் நரகத்திற்கு செல்வதற்கு சமமாக இருக்கும். மாபியா கும்பல் எளிய முறையில் போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை உருவாக்கி விடுகிறது. இந்த கடத்தல்காரர்களில் பெரும்பாலானவர்கள், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்களை ஏமாற்றுகின்றனர்.
பெண்களுக்கு பயங்கரமான விஷயங்கள் நடக்கின்றன. அமெரிக்காவை அடைய அவர்கள் அதைத் தாங்கிக் கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. சமீபத்தில் 30 வயதான தொழில்நுட்ப பட்டதாரியான மல்கீத் சிங், அமெரிக்காவை அடைய முயன்றபோது கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டார். இவ்வாறு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நிகழும் கொடூரம்!
மெக்சிகோ வழியாக ஆபத்தான மலையேற்றத்தில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.