ADDED : அக் 04, 2024 12:07 AM

பெங்களூரு : லால்பாக் பூங்காவில், அமைக்கப்பட்டிருந்த நுாலகம் மூடப்பட்டதால், வாசகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
பெங்களூரின் லால்பாக் பூங்கா வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். சர்வதேச அளவில் சுற்றுலா பயணியர் விரும்பும் இடங்களில், லால்பாக் பூங்காவும் ஒன்றாகும்.
தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், பொது மக்கள் வருகின்றனர். காலை, மாலையில் இளைஞர்கள், இளம் பெண்கள், மூத்த குடிமக்கள் நடை பயிற்சி செய்கின்றனர்.
லட்சக்கணக்கான பூச்செடிகள், மரங்கள், தாவரங்கள் இங்குள்ளன. இயற்கை எழில் மிகுந்த லால்பாக் பூங்காவில் நுாலகம் உள்ளது.
இதுவும் மக்களை ஈர்த்த இடமாகும். அனைத்து புத்தகங்களும் உள்ளதால், பொதுமக்கள் நுாலகத்தை தேடி வந்தனர். புத்தகம் படிப்பதற்காகவே பலரும் வந்தனர்.
தினமும் நடைபயிற்சிக்கு வருவோர், மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் இங்கு வருவர். தேவையான புத்தகங்களை படிப்பர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பலத்த மழை பெய்ததால், நுாலகத்துக்குள் நீர் புகுந்தது.
இதே காரணத்தால் லால்பாக் அதிகாரிகள், நுாலகத்தை மூடினர். இதுவரை திறக்கவில்லை.
படிக்க வரும் வாசகர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். விரைவில் நுாலகத்தை திறக்கும்படி வலியுறுத்துகின்றனர்.
லால்பாக் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:
மழைக்காலத்தின் போது, நுாலகத்தில் நீர் புகுந்தது. எனவே நுாலகத்தை மாற்றினோம். தற்போது நுாலகத்தில், 3,000 புத்தகங்கள் உள்ளன. இவற்றை வேறு இடத்துக்கு கொண்டு சென்று, பாதுகாப்பாக வைத்துள்ளோம். நுாலகத்தை சீரமைக்க ஏற்பாடு செய்கிறோம். விரைவில் பணிகளை முடித்து புத்தகங்கள் வைக்கப்படும். அதன்பின் பழையபடி இயங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.