உளவு பலூன்களை எதிர்கொள்ள தயார்; இலக்கை வீழ்த்தியது ரபேல் விமானம்!
உளவு பலூன்களை எதிர்கொள்ள தயார்; இலக்கை வீழ்த்தியது ரபேல் விமானம்!
ADDED : அக் 06, 2024 10:16 PM

புதுடில்லி: உளவு பார்க்கும் பலூன்களை எதிர்கொண்டு சுட்டு வீழ்த்தும் சோதனையை, ரபேல் போர் விமானம் மூலம் இந்திய விமானப்படை வெற்றிகரமாக செய்து பார்த்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவை உளவு பார்த்த சீன உளவு பலூன்கள் இந்தியாவிற்குள் வந்தால், சுட்டு வீழ்த்துவது குறித்து சோதனையை இந்திய விமானப்படை செய்து பார்த்தது.
இதன்படி 55 ஆயிரம் அடி உயரத்தில் இருந்த இலக்கை இந்திய விமானப்படை, ரபேல் போர் விமானம் மூலம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்காவின் வான்வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பலுான் ஒன்று பறப்பதை அமெரிக்க ராணுவம் 2023ம் ஆண்டு கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து கண்காணித்த நிலையில், அது சீன ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலுான் என்பது தெரிய வந்தது. பின், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அது குறித்த தொழில்நுட்ப விபரங்களை அறிந்து கொண்டனர். இந்த பலுான், நிலப்பரப்பில் இருந்து கடல்பகுதிக்குள் நுழைந்தபோது, அமெரிக்க எப் 22 ரேப்டார் போர் விமானம் வாயிலாக சுட்டு வீழ்த்தப்பட்டது.
இது குறித்து இந்தியாவுக்கும் தகவல் அளித்தது. இது போன்ற பலூன்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மேல் வந்ததாக தகவல் வெளியானது. 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இந்த பலூன்கள் தென்பட்டதால், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
தொடர்ந்து இதுபோன்ற அச்சுறுத்தல் வந்தால், அதனை எதிர்கொள்வது குறித்து, தயாராகும்படி விமானப்படைக்கு கூறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சீன உளவு பலூன்கள் போன்ற இலக்குகளை 55 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து சுட்டு வீழ்த்தி இந்திய விமானப்படை தனது திறமயை நிரூபித்து உள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
சீன உளவு பலூன்கள் போன்ற இலக்குகளை இந்திய விமானப்படை ரபேல் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது. இதற்காக பலூனில் சில பொருட்கள் வைத்து பறக்க விடப்பட்டு 55 ஆயிரம் அடி உயரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த சோதனை விமானப்படை தளபதி ஏபி சிங், முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.