மக்கள் நலனுக்காக பதவி விலக தயார் : மம்தா அறிவிப்பு
மக்கள் நலனுக்காக பதவி விலக தயார் : மம்தா அறிவிப்பு
UPDATED : செப் 12, 2024 07:51 PM
ADDED : செப் 12, 2024 07:45 PM

கோல்கட்டா: மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியிலிருந்து விலக தயார் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோல்கட்டாவில் இளம் பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஜூனியர் டாக்டர்கள் குழு வராததால், முதல்வர் மம்தா பானர்ஜி பல மணி நேரம் காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், கடந்த ஆக.,9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் மம்தா முதல்வர் பதவிலியிருந்து விலக வேண்டும் என 34 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் ஜூனியர் டாக்டர்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டு அவர்களுடன் முதல்வர் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் படி இன்று ( செப்.,12) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு டாக்டர்கள் குழு வரவில்லை இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார்.
இதையடுத்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினேன். தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை.
டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலக தயார். கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கும் , எனக்கும் நீதி வேண்டும். இவ்வாறு முதல்வர் மம்தா கூறினார்.