'பயங்கரவாதிகளை நாடு கடத்துவது பற்றி பாகிஸ்தான் அரசுடன் பேச தயார்'
'பயங்கரவாதிகளை நாடு கடத்துவது பற்றி பாகிஸ்தான் அரசுடன் பேச தயார்'
ADDED : மே 23, 2025 01:15 AM

புதுடில்லி: நம் வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாதம் மற்றும் அமைதி பேச்சை ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்பதை ஏற்கனவே பலமுறை கூறியுள்ளோம். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சு, இரு தரப்பாகவே இருக்கும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளோம். இதில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை.
பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தால் மட்டுமே, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி நீரைத் திறந்து விட முடியும். ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் ஓட அனுமதிக்க மாட்டோம்.
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தினால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து அந்த நாடு வெளியேறுவதாக மட்டுமே இருக்க முடியும்.
நம் நாட்டில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கும்படி, பாகிஸ்தானுக்கு ஏற்கனவே பட்டியல் கொடுத்துஉள்ளோம். அவ்வாறு பயங்கரவாதிகளை ஒப்படைக்க முன்வந்தால், அது தொடர்பாக பேசத் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.