கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை
கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை
ADDED : ஏப் 15, 2025 01:14 AM

பெங்களூரு : கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் அடிப்படையில், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை, 4ல் இருந்து 8 சதவீதமாக உயர்த்த பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2015ல் நடத்தப்பட்டது.
உச்ச வரம்பு
இதன் அடிப்படையில், முஸ்லிம்கள் உட்பட இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு சதவீதத்தை அதிகரிக்க மாநில பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
கர்நாடகாவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை, 18.08 சதவீதமாக உயர்ந்து உள்ளதாகவும், முஸ்லிம்களோடு சேர்த்து ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை, 69.60 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில மக்கள் தொகையில், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினரின் எண்ணிக்கை, 1.52 கோடியாக உள்ளது; அதாவது, மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 25 சதவீதம் பங்கு வகிக்கின்றனர். முஸ்லிம்கள் உட்பட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், 75.25 லட்சமாக உள்ளனர்.
இது குறித்து கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு 50 சதவீதம் என்பதை அதிகரிக்க, இந்திரா சாவ்னி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கர்நாடகாவில் நடைமுறைக்கு வரவில்லை. தமிழகத்தில் இடஒதுக்கீடு 69 சதவீதமாகவும், ஜார்க்கண்டில், 77 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனவே, கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்து உள்ளோம்.
கணக்கெடுப்பு
முஸ்லிம்கள் உட்பட, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை, 32 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளோம்.
எஸ்.சி., - எஸ்.டி.,க்கான இடஒதுக்கீடு தற்போது உள்ளதை போல 24 சதவீதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு, 10 சதவீதமாகவும் தொடரும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 17ம் தேதி நடக்கவுள்ள சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.