மும்பைக்கு ரெட் அலர்ட்... ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மும்பைக்கு ரெட் அலர்ட்... ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ADDED : செப் 25, 2024 10:21 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் பல்வேறு நகரங்களில் திடீரென கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் மும்பை மாநகரில் பேய் மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், அங்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பை, தானேவில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கையும், பல்ஹார் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், நகரின் பல்வேறு பகுதி சாலைகளில், தாழ்வான பகுதிகளில், வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, மன்ஹுர்டு பகுதியில் 19. செ.மீ., மழை பெய்துள்ளது. விக்ரோலியில் 188 செ.மீ.,மழையும், காட்கோபரில் 182 செ.மீ., மழையும், பதிவாகியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக, சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கும் வரும் பல்வேறு விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல, இங்கிருந்து செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், காட்கோபர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.