தந்தையின் மரணத்தை மறைத்து மகளுக்கு மணம் முடித்த உறவுகள்
தந்தையின் மரணத்தை மறைத்து மகளுக்கு மணம் முடித்த உறவுகள்
ADDED : ஜன 21, 2025 05:21 AM

சிக்கமகளூரு : திருமணத்துக்கு முந்தைய நாள், மணமகளின் தந்தை விபத்தில் இறந்துவிட, இவ்விஷயத்தை மனைவிக்கும், மகளுக்கும் தெரிவிக்காமல், உறவினர்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரேயைச் சேர்ந்தவர் சந்துரு, 45. இவரது மகள் திக் ஷிதா, 20. இவருக்கு நேற்று காலை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமண பதிவுக்கு தேவையான ஆவணங்கள் தயார் செய்வதற்காக, நண்பருடன் இரு சக்கர வாகனத்தில், சந்துரு நேற்று முன்தினம் காலை ஹுலிதிம்மாபுராவுக்கு சென்றார். அப்பணியை முடித்து, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில், சந்துருவும், நண்பரும் படுகாயம் அடைந்தனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, சந்துரு இறந்து விட்டார்.
இத்தகவல், சந்துருவின் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும், மற்ற உறவினர்களும் சேர்ந்து, இவ்விஷயத்தை கூறி, திருமணம் நின்றால் சந்துருவின் கனவு நிறைவேறாது என்பதால், சந்துரு இறப்பை மறைத்துவிட முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் நடந்த திருமண வரவேற்பில் சந்துரு இல்லாததால் அவரது மனைவியும், தந்தையை காணாது மகளும் தவித்தனர்.
அவர்களிடம் உறவினர்கள், 'திருமணத்துக்காக அங்கும் இங்கும் அலைந்ததால், சற்று தளர்வடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளார்' என சமாளித்தனர்.
நேற்று காலை முகூர்த்தம் வரை இதையே கூறி சமாளித்தனர். தாலி கட்டி முடித்த பின், சந்துரு மரண செய்தியை தெரிவித்தனர். இதை கேட்ட அனைவரும் கதறி அழுதனர். திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. திருமண கோலத்தில் மருத்துவமனைக்கு சென்ற திக் ஷிதா, தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.