ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது ரிலையன்ஸ்: அமெரிக்கா வரவேற்பு
ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது ரிலையன்ஸ்: அமெரிக்கா வரவேற்பு
ADDED : நவ 21, 2025 10:34 PM

புதுடில்லி: ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரை காரணம் காட்டி, ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனமாக தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தது. குஜராத்தின் ஜாம் நகரில் அந்த நிறுவனதிற்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்தில் ரஷ்யா கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாடுகள் வாயிலாக ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் மற்றும் லக்காயில் நிறுவனங்கள் மீதான தடை இன்று(நவ.,21) முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் உத்தரவுக்கு இணங்கும் வகையில் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குதியை நிறுத்துவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2026 ஜன.,21 முதல் அமலுக்கு வரும் இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த முடிவை வரவேற்கிறோம். இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ள வகையில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆர்வமுடன் இருக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

