இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது ஜாமின்: டில்லி முன்னாள் அமைச்சருக்கு நிம்மதி
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது ஜாமின்: டில்லி முன்னாள் அமைச்சருக்கு நிம்மதி
UPDATED : அக் 18, 2024 08:40 PM
ADDED : அக் 18, 2024 06:58 PM

புதுடில்லி: பணமோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
டில்லியில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். அவர் தொடர்புடைய நிறுவனங்களில் பணமோசடி நடந்ததாக 2017 ம் ஆண்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.
பிறகு 2022 மே 31ம் தேதி பண மோசடி சட்டத்தின் கீழ், சத்யேந்திர ஜெயினை கைது செய்து டில்லி திஹார் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் பல முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
இடையில் 2023ம் ஆண்டு மே மாதம் மருத்துவ காரணங்களுக்காக சத்யேந்திர ஜெயினுக்கு சுப்ரீம் கோர்ட் 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கியது. பிறகு அவர் நிரந்தர ஜாமின் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் திஹார் சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி விஷால் கோக்னே விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது : விசாரணையில் தாமதம், நீண்ட நாள் சிறைவாசம் மற்றும் வழக்கு விசாரணை துவங்க நீண்ட நாட்களாகும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நிவாரணம் பெற தகுதி உடையவர்'', எனக்கூறி ஜாமின் வழங்கியதுடன், பணமோசடி தடுப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் வரும் வழக்குகளில் தனிமனித சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டினார்.
நிபந்தனை
*ஜாமின் வழங்க சத்யேந்திர ஜெயினுக்கு நீதிபதி பிறப்பித்த நிபந்தனைகள்: *ரூ.50 ஆயிரத்திற்கான தனி நபர் ஜாமின் பத்திரம், அதே தொகைக்கு இரண்டு பேர் உத்தரவாதம் வழங்க வேண்டும்.*சாட்சிகளுடனோ, வழக்குடன் தொடர்புடைய தனி நபர்களுடனோ தொடர்பு கொள்ளக்கூடாது.*விசாரணையில் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்தக்கூடாது. *நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியினரில் ஜாமின் கிடைத்த 3வது நபர் இவர் ஆவார். இதற்கு முன்னர் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோரும் ஜாமினில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.