ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்
ADDED : பிப் 20, 2025 06:45 AM

பெலகாவி: ''பெலகாவியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய கும்பல், 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட எஸ்.பி., பீமாசங்கர் குலேத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, நேற்று அவர் அளித்த பேட்டி:
பெலகாவி மாவட்டம், முதல்கியின் ராஜாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் அம்பி, 48. பிப்., 14ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
பெலகாவியின் தண்டாபுரா கிராஸ் அருகே வந்தபோது, காரை வழிமறித்த மர்ம நபர்கள், அவர் காரை நிறுத்தியதும், அதில் ஏறி, காருடன் அவரை கடத்தினர்.
மறுநாள் காலை தன் மொபைல் போனில் இருந்து, மனைவி ஷோபாவிடம் பேசிய பசவராஜ் அம்பி, கடத்தல் சம்பவத்தை விவரித்து, கடத்தல்காரர்கள் ஐந்து கோடி ரூபாய் கேட்பதாக தெரிவித்தார்.
ஷோபா, மகன் ஹூலிராஜிடம் விஷயத்தை கூறினார். அவரும், பல இடங்களில் பணத்தை புரட்டினார். கடத்தல்காரர்கள் கூறியபடி, பிப்., 16ம் தேதி நிப்பானியில் உள்ள தாபா ஒன்றின் அருகில் பணத்துடன் ஷோபா காத்திருந்தார்.
அதேநேரத்தில் அவரது மகன், தன் நண்பர்கள் நான்கைந்து பேருடன் அங்கிருந்தார். இதை பார்த்த கடத்தல்காரர்கள், ஷோபாவுக்கு போன் செய்து, 'உன்னை மட்டும் தானே வரச்சொன்னோம். நீ, உன் மகன், அவர்களின் நண்பர்களை அழைத்து வந்துள்ளாய். உன் கணவரை கொன்று விடுகிறோம்' என்று மிரட்டினர்.
அதற்கு அவர், மன்னித்து விடுங்கள். அப்படி செய்ய வேண்டாம். பணத்தை தந்துவிடுகிறோம்' என்று தெரிவித்தார்.
மீண்டும் மறுநாள் அவரை வீடியோ காலில் பசவராஜ் அம்பியை காண்பித்த கடத்தல்காரர்கள், குறிப்பிட்ட இடத்தில் பணத்தை வைக்கும்படி கூறியுள்ளனர். அவர்கள் கூறிய இடத்தில் சென்றபோது, பசவராஜ் அம்பியின் கார் மட்டுமே இருந்தது. வேறு யாரும் இல்லை. இம்முறையும் பணம் தர முடியாததால், ஷோபா வேதனை அடைந்தார்.
உடனடியாக கட்டபிரபா போலீசில் புகார் அளித்துள்ளார். கடத்தல்காரர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மொபைல்போன் நெட்ஒர்க்கை வைத்து பார்த்தபோது, கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் இருப்பது தெரிகிறது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாலும், பண இரட்டிப்பு திட்டம் என்ற பெயரில் ஏமாற்றியதாக, பசவராஜ் அம்பி மீது குற்றச்சாட்டு உள்ளது.
குறைந்த காலகட்டத்தில், ஒரு கோடி ரூபாயில் வீடு, கார், இரு சக்கர வாகனங்களை பசவராஜ் அம்பி வாங்கி உள்ளார்.
அவரது பின்னணி குறித்தும்; அவரை பற்றி தெரிந்தவர்கள் யாரேனும் அவரை கடத்தினார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

