குடியரசு தின விழா கொண்டாட்டம் எதிரொலி; நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
குடியரசு தின விழா கொண்டாட்டம் எதிரொலி; நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
UPDATED : ஜன 26, 2026 12:02 AM
ADDED : ஜன 25, 2026 10:44 PM

புதுடில்லி: குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டில்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நம் நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டம் இன்று (ஜனவரி 26) கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்க பாகிஸ்தானுடன் தொடர்புள்ள பயங்கரவாதிகள் டில்லியில் நாசவேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, டில்லி மாநகர் மற்றும் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மாநகர் முழுவதும் பல இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை நடத்தப்படுகிறது.
குண்டு வெடிப்பு
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், அரசு அலுவலகங்களில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்தி ரோந்து சுற்றி வருகின்றனர். குடியரசு தின விழா நடக்கும் இடங்களிலும், தேசியக் கொடி ஏற்றப்படும் இடங்களிலும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மாநில எல்லைகளில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில், 6,000 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.பஞ்சாபின் பதேகட் சாஹிப் மாவட்டம் சிர்ஹிந்த் பிரத்யேக சரக்கு ரயில் பாதையில், 23ம் தேதி இரவு நடந்த குண்டு வெடிப்பால் ரயில் எஞ்சின் சேதம் அடைந்து, லோகோ பைலட் காயம் அடைந்தார். எனவே, ரயில் பாதைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்தவர் பஞ்சாபில் சிக்கினார்
அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி, ஷாசாத் பட்டியுடன் தொடர்பில் இருந்த, ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த ராமன்குமார் என்ற கோலு, பஞ்சாப் போலீசின் சிறப்பு அதிரடிக் குழுவால் கைது செய்யப்பட்டார். அவரி டம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சமூக ஊடகங்களான, 'இன்ஸ்டாகிராம்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக ஷாசாத் பட்டியுடன் ராமன் குமாருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும், அம்பாலா போலீஸ் ஸ்டேஷன் குண்டுவெடிப்பில் சம்பந்தம் இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவியும் செய்துள்ளார். இந்த தகவலை பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

