ADDED : ஜன 30, 2024 12:36 AM
திருவனந்தபுரம்: சபரிமலை மகர விளக்கு காலத்தின் போது ஜன., 12ல் மாயமான சென்னை பக்தர் கருணாநிதி 58, கொல்லம் ரயில்வே ஸ்டேஷனில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கருணாநிதி ஜன., 10 ல் 72 பேர் அடங்கிய குழுவினருடன் சபரிமலை சென்றார். தரிசனத்தை முடித்து அனைவரும் ஜன., 12-ல் சபரிமலையில் இருந்து புறப்பட்ட போது நிலக்கல்லில் கருணாநிதி மாயமானார். உடன் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு லேசான ஞாபக மறதி இருந்ததாக கூறி பம்பை போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் புகார் அளித்து ஊருக்கு சென்றனர்.
ஜன., 20 ல் ஒருவர் கொல்லம் ரயில்வே ஸ்டேஷனில் மயங்கி நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் மாயமானார். இரு நாட்களுக்கு முன்பு அதே ரயில்வே ஸ்டேஷனில் கையில் காயங்களுடன் அந்த நபர் மயங்கி கிடந்ததை கண்ட ஆட்டோ டிரைவர்கள் அவரை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரணையில் அவர் சபரிமலையில் மாயமான கருணாநிதி என உறுதிபடுத்தினர். உடல் நலம் சரியானதையடுத்து ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாநிதியை உறவினர்களுடன் போலீசார் அனுப்பினர்.