'என்கவுன்டர்' பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் மீட்பு
'என்கவுன்டர்' பகுதியில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் மீட்பு
ADDED : நவ 12, 2024 12:21 AM

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, அப்பகுதியில் மலையேற்றம் சென்ற இருவர் சிக்கித் தவித்தனர். போலீசாரை தொடர்பு கொண்டதை அடுத்து, இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் ஜபர்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன்தினம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அந்த சமயத்தில், அப்பகுதியில் இருவர் மலையேற்ற பயிற்சிக்காக சென்றனர்.
துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அலறிய அவர்கள், பாறைகளின் பின்னால் ஒளிந்து கொண்டனர். அவர்களில் ஒருவர், மொபைல் போனில் காவல் துறை அவசர உதவி எண் 100ஐ அழைத்து, என்கவுன்டர் நடக்கும் இடத்தில் தாங்கள் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.
இந்த தகவல், என்கவுன்டரில் பங்கேற்ற போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து என்கவுன்டரை தற்காலிகமாக நிறுத்திய போலீசார், பாறைகள் பின்னால் ஒளிந்திருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து, காஷ்மீர் டி.ஜி.பி., விதி குமார் பிர்டி கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் மலையேற்றம் செய்ய விரும்பும் நபர்கள், தாங்கள் செல்லும் பகுதி, நேரம், வழித்தடம் உள்ளிட்ட தகவல்களை, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
இதனால், எதிர்பாராத சம்பவங்கள் நடந்தால், அவர்களின் பாதுகாப்பை விரைவாக உறுதி செய்ய முடியும். இதற்கு உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

