குருவாயூர் கோவில் இசையின் முக்கியத்துவம் குறித்து ஆராய்ச்சி
குருவாயூர் கோவில் இசையின் முக்கியத்துவம் குறித்து ஆராய்ச்சி
ADDED : ஜூலை 03, 2025 10:14 PM

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிகழ்வுகளில் இசைக்கும், இசைக்கருவிகளுக்கும், தாளத்துக்கும் உள்ள முக்கியத்துவம் குறித்து ஆராய்ச்சி செய்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாக, மிருதங்க வித்வான் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், குழல்மன்னம் பகுதியைச் சேர்ந்தவர் மிருதங்க வித்வான் ராமகிருஷ்ணன். 501 மணி நேரம் மிருதங்கம் வாசித்து சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இவர், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தில் நீண்ட காலமாக கலந்து கொண்டு சங்கீத ஆராதனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிகழ்வுகளில் இசைக்கும் இசைக்கருவிகளுக்கும், தாளத்துக்கும் உள்ள முக்கியத்துவம் குறித்து ஆராய்ச்சி செய்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க தயாராக உள்ளார்.
இதுகுறித்து, ராமகிருஷ்ணன் கூறியதாவது:
மத்திய கலாசார துறையின் உதவித்தொகையை பயன்படுத்தி, இந்த ஆராய்ச்சி செய்துள்ளேன். செண்டை, இடைக்கா, நாதஸ்வரம், மரப்பாணி, குழித்தாளம் போன்ற இசை கருவிகளுக்கும், இசைக்கும், தாளத்துக்கும் கோவில் நிகழ்வுகளில் பெரிய முக்கியத்துவம் உள்ளது. இது வரலாற்றுடன் தொடர்புடையது.
எனது, 12 வயதிலிருந்து குருவும், தந்தையுமான மறைந்த கோபால கிருஷ்ண ஐயருடன், குருவாயூர் கிருஷ்ணர் கோவில் திருவிழாவை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தில் மிருதங்கம் வாசித்து வருகிறேன். 35 வருடமாக அதை தவறாமல் தொடர்ந்து வருகிறேன்.
இவ்வாறு, கூறினார்.