தெரு நாயை சுட்டுக்கொன்ற ஓய்வு பெற்ற இன்ஜினியர் கைது
தெரு நாயை சுட்டுக்கொன்ற ஓய்வு பெற்ற இன்ஜினியர் கைது
ADDED : ஜூலை 05, 2025 08:32 PM
பிஜ்னோர்:உத்தர பிரதேசத்தில், தெரு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற, ஓய்வு பெற்ற இன்ஜினியரை போலீசார் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவரது துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உ.பி., மாநிலம், பிஜ்னோர் சாவித்ரி என்கிளேவில் வசிப்பவர் ராஜ்வீர் சிங். ஓய்வு பெற்ற இன்ஜினியர். நேற்று முன்தினம் மாலை, தன் வீட்டுக்கு அருகே திரிந்த தெரு நாயை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தார்.
இதுகுறித்த புகார்படி விசாரணை நடத்திய போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ராஜ்வீர் சிங், தெரு நாயை சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டது.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, ராஜ்வீர் சிங்கை கைது செய்து, அவரிடம் இருந்த உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட நாய் உடல், உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
விலங்குகள் நல உரிமை ஆர்வலர்கள் அனுராதா மாத்துார் மற்றும் ஜோதி சர்மா ஆகியோர், “ராஜ்வீர் சிங்கின் துப்பாக்கி உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்,” என்றனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் எல்.எஸ்.பிஷ்ட் மற்றும் ராஜ்குமார் கல்ரா ஆகியோர், “அந்த நாய் பெரும்பாலும் ராஜ்வீர் சிங் வீட்டுக்கு வெளியேதான் ஓய்வெடுக்கும். ஆனால், நேற்று முன் தினம் ராஜ்வீர் சிங், நாயைத் துரத்திச் சென்று ஐந்து முறை சுட்டார். அது, சுருண்டு விழுந்து உயிரிழந்தது,” என்றனர்.

