UPDATED : நவ 05, 2024 10:40 PM
ADDED : நவ 05, 2024 06:40 PM

மும்பை: அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதை சூசகமாக தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைந்த பிறகு எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் எனக்கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான சரத்பவார், காங்கிரசில் பல பதவிகளை வகித்து வந்தார். 1999 ல் அக்கட்சியில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். நாட்டின் முதுபெரும் அரசியல்வாதியாக திகழ்கிறார். ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிய 18 மாதங்கள் உள்ளது. இவரது மகள் சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். இவரது அண்ணன் மகன் தான் அஜித்பவார். இவர் கட்சியை உடைத்து பா.ஜ., கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் பாரமதி தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சரத் பவார் பேசியதாவது: நான் அதிகாரத்தில் இல்லை. எனது ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நிறைவு பெறுகிறது. இதற்கு பிறகு எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நான் ஏதாவது ஒரு இடத்தில் நின்று ஆக வேண்டும். இந்த பகுதியில் எனக்கு ஓட்டுப்போட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சரத் பவார் கூறினார்.