சிக்கலில் ரேவண்ணா குடும்பம்: குடும்பத்துடன் குமாரசாமி 'டூர்'
சிக்கலில் ரேவண்ணா குடும்பம்: குடும்பத்துடன் குமாரசாமி 'டூர்'
ADDED : மே 31, 2024 06:24 PM

மைசூரு: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. சகோதரரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு மத்தியில், ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி, தனது குடும்பத்துடன் மைசூரில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.
பாலியல் பலாத்கார வழக்கில், ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை போலீசார், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தனர். மறுபக்கம், தன் மீதான பெண் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி, ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், இதே வழக்கில் நாளை (ஜூன் 1) விசாரணைக்கு ஆஜராக, பவானி ரேவண்ணாவுக்கு எஸ்.ஐ.டி., சம்மன் அனுப்பி உள்ளது.
இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ம.ஜ.த., மாநில தலைவரும், ரேவண்ணாவின் தம்பியுமான குமாரசாமி, தன் மனைவி அனிதா, மகன் நிகில் குமாரசாமி, அவரது மனைவி ரேவதி, பேரன் அவ்யன் தேவுடன், மைசூரின் எச்.டி.கோட்டேக்கு, மே 28ம் தேதி இரவு வந்தார். கபினி அணை அருகில் உள்ள ஆரஞ்சு கவுன்டி சொகுசு விடுதியில் தங்கினார். மறுநாள், மைசூரில் பல சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்துள்ளார். அங்குள்ள அணைப்பகுதியில் தனது குடும்பத்துடன் படகு பயணம் மேற்கொண்டுள்ளார்.
உடன் பிறந்த சகோதரரின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு மத்தியிலும், தனது குடும்பத்துடன் குமாரசாமி சுற்றுலா சென்றுள்ளது, கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.