ADDED : மார் 16, 2025 02:51 AM
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டதை அடுத்து, வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், பிர்பூம் மாவட்டத்தில் இணையசேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள மலை மாவட்டமான பிர்பூமில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, சைந்தியா நகரம் உட்பட பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் இரவு ஹோலி கொண்டாட்டத்தின் போது, இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இங்குள்ள சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில அரசின் உள்துறை மற்றும் மலைவாழ் விவகாரங்கள் துறை முதன்மை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பிர்பூம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறிஉள்ளன.
இது தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையிலும், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதத்திலும், நாளை காலை 8:00 மணி வரை சில பகுதிகளில் இணையசேவை நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.