மனிதர்கள் - வனவிலங்கு மோதல் அதிகரிக்க சாலையோர கடைகள் காரணம்
மனிதர்கள் - வனவிலங்கு மோதல் அதிகரிக்க சாலையோர கடைகள் காரணம்
ADDED : அக் 17, 2024 09:29 PM
மூணாறு:கேரள மாநிலம், மூணாறு பகுதியில் சமீப காலமாக மனித, வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. அது குறித்து மூணாறு வனத்துறை அதிகாரி ரமேஷ்விஸ்னோய் ஆய்வு நடத்தி இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
மூணாறு வனப்பிரிவுக்கு கீழ் உள்ள பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோட்டின் ஓரங்களில் சட்டவிரோதமாக 387 கடைகள் உள்ளன. அவற்றில் சுற்றுலா பயணிகளுக்கு விற்கப்படும் உணவு, குளிர்பானங்கள் ஆகியவற்றின் கழிவுகள் அலட்சியமாக வீசப்படுகின்றன.
ருசிக்காக பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள், உப்பு ஆகியவை வனவிலங்குகளை எளிதில் கவரும் என்பதால், அதற்காக யானை உள்ளிட்டவை நாள் கணக்கில் ரோடுகளில் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது. அதனால் மனித, வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பது வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.
மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கை சுற்றி காய்கறி உட்பட கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. அங்கு ஒரு மாதத்திற்கு முன் கழிவுகளை தின்று கொண்டிருந்த காட்டு யானை தாக்கி மூன்று துாய்மைப் பணியாளர்கள் பலத்த காயமடைந்தனர். குப்பை சேமிப்பு கிடங்கை சுற்றி சோலார் வேலி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.