ADDED : அக் 13, 2024 11:08 PM

மைசூரு: மைசூரு தசரா திருவிழாவின் போது, முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்த வரிசையில், ரவுடி பிரகாஷ் முதோல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரில் தசரா திருவிழா நேற்று முன்தினம், கோலாகலமாக நடந்தது.
நிகழ்ச்சி மேடையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் மஹாதேவப்பா, சிவராஜ் தங்கடகி, லட்சுமி ஹெப்பால்கர் வி.ஐ.பி., வரிசையில் அமர்ந்திருந்தனர்.
இதே வரிசையில் ரவுடி பிரகாஷ் முதோல் அமர்ந்திருந்தார்.
இவர் காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திராவுடன், 'செல்பி' எடுத்து கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வி.ஐ.பி.,க்களுடன் ரவுடியை அமர்த்தியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரவுடி பிரகாஷ் முதோல், சமீபத்தில் பாகல்கோட்டின், சீமகேரி ராமரூடா மடத்தின் மடாதிபதியின் ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி, ஒரு கோடி ரூபாய் வசூலித்தார்.
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். ஐந்து நாட்களுக்கு முன், ஜாமினில் விடுதலை ஆனார்.
இப்படிப்பட்டவர் தசரா நிகழ்ச்சி மேடையில், வி.ஐ.பி.,க்கள் வரிசையில் அமர்ந்துஉள்ளார்.
ம.ஜ.த., பிரமுகரான பிரகாஷ் முதோல், 2023 சட்டசபை தேர்தலில் பெலகாவியின், ராமதுர்கா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் பெயரில் மோசடி செய்ய முயற்சித்தார்.
அமைச்சர் திம்மாபூர் மருமகன் என, கூறிக்கொண்டு கார் லோன் பெற முயற்சித்தது உட்பட 11 வழக்குகள் பதிவாகியுள்ளது.
இத்தகைய நபரை, வி.ஐ.பி.,க்களுடன் அமர அனுமதித்ததை பொது மக்கள் கண்டித்துள்ளனர்.