சர்க்கரை ஆலை மோசடி தகவல் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு
சர்க்கரை ஆலை மோசடி தகவல் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு
ADDED : டிச 17, 2024 05:03 AM

பெலகாவி: ''எடை மற்றும் விலையில் மோசடி செய்யும் சர்க்கரை ஆலைகள் குறித்து, தகவல் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும்,'' என, சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்தா பாட்டீல் தெரிவித்தார்.
பெலகாவி, சுவர்ண விதான்சவுதா அருகில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளை, அமைச்சர் சிவானந்தா பாட்டீல் சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:
சர்க்கரை ஆலைகளில் எடையில் மோசடி நடப்பது குறித்து, புகார் அளிக்க விவசாயிகள் பயப்பட தேவையில்லை. புகார் அளித்தால், அவர்களுக்கு அரசு பாதுகாப்பாக நிற்கும். உடனடி நடவடிக்கை எடுக்கும். சர்க்கரை ஆலைகளின் மோசடி குறித்து, தகவல் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும். அவர்களின் கரும்பை பிழியும் பொறுப்பை அரசு ஏற்கும்.
மாநிலத்தின் 13 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை, முந்தைய அரசு தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் அளித்துள்ளது. எங்கள் அரசு நஷ்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை சீரமைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.