ADDED : பிப் 01, 2024 06:42 AM
பெங்களூரு: 'பெங்களூரில் மெட்ரோ ரயிலில் பெண் பயணியரிடம், அநாகரிகமாக நடந்து கொள்ளும், ஆண் பயணியரிடம் இருந்து இனி 10,000 ரூபாய், அபராதம் விதிக்கப்படும்' என்று பி.எம்.ஆர்.சி.எல்., அறிவித்து உள்ளது.
பெங்களூரில் செல்லகட்டா - ஒயிட்பீல்டு, மாதவரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும், 6 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதன்மூலம் நகரில் போக்குவரத்து நெரிசலை, ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிகிறது.
காலை, மாலை நேரங்களில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண் பயணியர் மீது, ஆண் பயணியர் வேண்டும் என்றே இடிப்பது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
சமீபத்தில் கூட, மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருந்த, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஆண் பயணி கைது செய்யப்பட்டு இருந்தார். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம், பெங்களூரு மெட்ரோ நிறுவனம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கிறது.
அபராத தொகை குறைவு என்பதால், தவறு செய்து விட்டு அபராதம் கட்டி கொள்ளலாம் என்ற மிதப்பில், சில ஆண் பயணியர் வாலாட்டி வந்தனர். இதற்கு பி.எம்.ஆர்.சி.எல்., தற்போது ஆப்பு வைத்து உள்ளது.
மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும், ஆண் பயணியருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 500 ரூபாயில் இருந்து, 10,000 ரூபாயாக உயர்த்தி, பி.எம்.ஆர்.சி.எல்., உத்தரவிட்டு உள்ளது.
அபராத தொகை உயர்த்தப்பட்டதன் மூலம், பெண் பயணியர் பாலியல் தொல்லைக்கு ஆளாகாமல், நிம்மதியாக பயணிப்பர் என்று நம்புவதாக, பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரிகள் கூறி உள்ளனர்.