6 மாநிலங்களுக்கு ரூ. 1,066 கோடி ஒதுக்கீடு; வெள்ள நிவாரண பணிகளை வேகமாக செய்ய மத்திய அரசு உத்தரவு
6 மாநிலங்களுக்கு ரூ. 1,066 கோடி ஒதுக்கீடு; வெள்ள நிவாரண பணிகளை வேகமாக செய்ய மத்திய அரசு உத்தரவு
ADDED : ஜூலை 10, 2025 09:07 PM

புதுடில்லி: இந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு நிவாரணமாக ரூ.1,066.80 கோடியை மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில், சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் பலரது வீடுகள் மண்ணில் புதைந்தன. உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி, கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பகுதிகளில் நிலச்சரிவால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பலரது வீடுகள் இடிந்ததுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகள் நாசம் அடைந்துள்ளன. கேரளாவிலும் பருவமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம், கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில், நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யவும், மக்களுக்கு உதவிகள் வழங்கவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் சார்பில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. அசாமுக்கு 375 கோடி, மணிப்பூருக்கு 29 கோடி, மேகாலயாவுக்கு 30 கோடி, மிசோரமுக்கு 22 கோடி, கேரளாவுக்கு 153 கோடி ரூபாய் மற்றும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ள உத்தராகண்டுக்கு 455 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழையால் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மேற்கண்ட ஆறு மாநிலங்களிலும் வெள்ள நிவாரண பணிகளை துரித கதியில் செயல்படுத்துவதை உறுதி செய்யும்படி மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.