ஐ.டி., நிறுவன ஊழியரிடம் ரூ.11 கோடி மோசடி; மூவர் கைது
ஐ.டி., நிறுவன ஊழியரிடம் ரூ.11 கோடி மோசடி; மூவர் கைது
ADDED : ஜன 20, 2025 07:06 AM

ஐ.டி., நிறுவன ஊழியரிடம் 11 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, ஜி.கே.வி.கே., லே - அவுட்டை சேர்ந்த விஜய்குமார், 39. இவர் ஐ.டி., நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் கடந்த நவம்பரில் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி உள்ளார்.
உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம்கார்டில் இருந்து சட்டவிரோத விளம்பரம், ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பப்படுகிறது. இதனால் நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்படுகிறீர்கள் என கூறி உள்ளார். இதை கேட்டு பதற்றமடைந்த விஜய்குமார் செய்வதறியாது திகைத்து உள்ளார்.
இதை தொடர்ந்து புதிய எண்ணில் இருந்து மர்ம நபர் ஒருவர், வீடியோ கால் செய்து உள்ளார். காக்கி உடையில் இருந்தார்.
தன்னை உயர் போலீஸ் அதிகாரி என கூறிக் கொண்டார். டிஜிட்டல் கைது வழக்கில் இருந்து வெளிவர வேண்டுமானால், நான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டுமென்று கூறி உள்ளார். இதுபோன்று தவணை முறையில், 11 கோடி ரூபாய் அனுப்பி உள்ளார்.
சில நாட்கள் கழித்து, யாரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. சந்தேகமடைந்த விஜய்குமார் வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சூரத்தில் உள்ள தங்க நகை வியாபாரியின் வங்கி கணக்கிற்கு 7.50 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார், சூரத் சென்று, சம்பந்தப்பட்ட நகை வியாபாரியிடம் விசாரித்தனர். அப்போது தவால் ஷா என்பவர், தங்க நகைகளை வாங்கிவிட்டு, பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தி உள்ளார் என அவர் கூறி உள்ளார். தவால் ஷாவை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி, தருண் நடனி, கரண் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த திட்டத்தை துபாயை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் தீட்டியதும், இதற்காக அவருக்கு 1.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்தது - நமது நிருபர் - .