ADDED : பிப் 10, 2025 10:19 PM

புதுடில்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் ரூ.25,330 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் போதைப்பொருட்களுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி, தீவிர நடவடிக்கையை தொடங்கியது.
இது குறித்து போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் ( நார்காடிக் கண்ட்ரோல் பீரோ) அறிக்கை:
2024ம் ஆண்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கையின் மூலம் ரூ.25,330 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது 2023ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்டதை விட 55 சதவீதம் அதிகமாகும்.
மத்திய அரசின் போதைப்பொருட்களுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின்படி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் உட்பட அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
செயற்கை போதை மருந்துகள், கோகைன் மற்றும் சைக்கோட்ரோபிக் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவற்றின் பறிமுதல் கணிசமாக அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முழு வீச்சுடன் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

