சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ரூ.2.73 கோடி பறிமுதல்
சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ரூ.2.73 கோடி பறிமுதல்
ADDED : அக் 20, 2024 12:10 AM

பெலகாவி : மஹாராஷ்டிராவில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2.73 கோடி ரூபாயை, கர்நாடக போலீசார் பறிமுதல் செய்தனர்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலும், கர்நாடகாவின் ஷிகாவி, சண்டூர், சென்னப்பட்டணா சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நவம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டு மாநிலங்களுக்கு இடையே, பணம் கடத்தும் வாய்ப்புள்ளது.
இதை கருத்தில் கொண்டு, கர்நாடக எல்லைப்பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து, கர்நாடகாவுக்குள் நுழையும் வாகனங்கள், வெளியே செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது.
அதேபோன்று, மஹாராஷ்டிராவை ஒட்டியுள்ள பெலகாவியிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெலகாவியின், மாளமாருதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக, அசோக் லேலண்ட் சரக்கு வாகனம் சென்றது. அதை தடுத்து நிறுத்தி, போலீசார் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாக 2.73 கோடி ரூபாய் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை பதுக்கி வைப்பதற்காகவே, அந்த சரக்கு வாகனத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பணத்தை கொண்டு வந்த சச்சின் மனகுதளே, மாருதி மாரகுடேவிடம் எந்த ஆவணங்களும் இல்லை.
மஹாராஷ்டிராவின் சாங்க்லியானாவில் இருந்து, ஹூப்பள்ளி வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்வதாக அவர்கள் கூறினர்.
சரக்கு வாகனத்துடன், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மாருதி மாரகுடே, சச்சின் மனகுதளேவை கைது செய்தனர். பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.