அடக்கம் செய்த கணக்கில் அடங்காத ஊழல்; வயநாட்டில் ஒவ்வொரு உடலுக்கும் ரூ.75 ஆயிரம் கணக்கெழுதிய கேரளா!
அடக்கம் செய்த கணக்கில் அடங்காத ஊழல்; வயநாட்டில் ஒவ்வொரு உடலுக்கும் ரூ.75 ஆயிரம் கணக்கெழுதிய கேரளா!
ADDED : செப் 17, 2024 10:21 AM

திருவனந்தபுரம்: வயநாடு துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 359 பேரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய ரூ.2.76 கோடி செலவிட்டதாக மாநில அரசு கூறியுள்ளது; ஒவ்வொரு உடலுக்கும் அடக்கம் செய்ய ரூ.75 ஆயிரம் செலவானதாக கணக்கு தரப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமான வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக செய்த செலவினங்களை மாநில அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
* துணிகள் மற்றும் பாத்திரங்கள் வாங்க ரூ.11 கோடி செலவழிக்கப்பட்டது. ஒரு உயிர் பிழைத்த ஒவ்வொருவருக்கும் ரூ.26,816 செலவு செய்யப்பட்டுள்ளது.
* உயிரிழந்த 359 பேரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய ரூ. இரண்டு கோடியே எழுபத்தாறு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் செலவு ஆகியுள்ளது. அதாவது ஒவ்வொரு உடலுக்கும் ரூ.75,000 செலவு செய்யப்பட்டது.
* நிலச்சரிவில் 60%க்கும் அதிகமானவர்களுக்கு உடல் ஊனம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.6.25 கோடி தேவைப்படுகிறது. தற்போது மத்திய அரசு விதிப்படி, ஊனமுற்றோரின் மறுவாழ்வுக்காக கேரளா அரசு ரூ.62.5 லட்சம் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
உடல் அடக்கம், ஊனமுற்றோர் மறுவாழ்வு போன்ற செலவினங்களுக்கு எழுதப்படும் செலவினங்களை மத்திய அரசு அப்படியே முழுவதுமாக வழங்கி விடும் என்ற எண்ணத்தில், இப்படி மிகைப்படுத்தி கணக்கு எழுதப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிற செலவுகள்
அரசு தாக்கல் செய்த பிற செலவுகள் விபரம் பின்வருமாறு: நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஆயுதப்படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயணச் செலவாக ரூ.4 கோடி. இந்த உதவிப் பணியாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ரூ.10 கோடி.
* சேவை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்ய ரூ.15 கோடி. மருத்துவ உதவிக்கு ரூ.2.02 கோடி. பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடத்திற்கு மாற்ற ரூ.12 கோடி.
* பெய்லி பாலம் கட்ட ரூ.1 கோடி. ரெயின்கோட், குடை போன்ற பொருட்களை வாங்க ரூ.2.98 கோடி.
* உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் சோகம் நடந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன், ரேடார் உள்ளிட்ட சாதனங்களுக்கு ரூ.3 கோடி. ஜே.சி.பி., மற்றும் மண் அள்ளும் கருவிகள் மற்றும் கிரேன்கள் போன்ற மற்ற உபகரணங்களுக்காக 15 கோடி ரூபாய்.
* உடல்களின் டி.என்.ஏ., சோதனை நடத்த ரூ.3 கோடி. முகாம்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய ரூ.8 கோடி. ஆடைகளுக்கு ரூ.11 கோடி.
* உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவ உதவிக்கு ரூ.8 கோடி. ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்ய ரூ.7 கோடி. இந்திய விமானப்படைக்கு பணியாளர்களின் சேவைகள், உடல்களை அகற்றுதல் மற்றும் விஐபிகள் வருகைக்கு உதவுவதற்காக ரூ.17 கோடி வழங்கப்பட்டது.
* பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு குடிநீர் விநியோகிக்க ரூ.3 கோடி. நிலச்சரிவின் குப்பைகளை அகற்ற ரூ.36 கோடி.
* விவசாய நிலங்களில் உள்ள சேறு மற்றும் வண்டல் மண்ணை அகற்ற ரூ.64.62 லட்சம், பயிர் விவசாயிகளுக்கு ரூ.6.30 லட்சம். கால்நடைகளை இழந்த மக்களுக்கு ரூ.87.37 லட்சம். ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ.6.48 லட்சம்.
* கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.1 லட்சம். உயிர் பிழைத்த கால்நடைகளுக்கு முகாம் ஏற்பாடு செய்ய ரூ.78,000.

